September 18, 2026

ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து கார், வீடு சேதம்

ஆண்டிபட்டி, செப். 18:

ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் கார் மற்றும் வீட்டின் மதில் சுவர் சேதமடைந்தது. இதனால் ஆண்டிபட்டி – பாலக்கோம்பை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு கனமழை பெய்தது. குறிப்பாக, பாலக்கோம்பை பகுதியில் சூறாவளிகாற்றுடன் பலத்த மழை பெய்தது.

இம்மழையின் போது, ஆண்டிபட்டி – பாலக்கோம்பை பிரதான சாலையில் நின்றிருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான ராட்சத புளியமரம் ஒன்று காற்றின் வேக தாங்காமல் திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது.

அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் கார் பலத்த சேதமடைந்தது. மேலும், அருகிலிருந்த ஒரு வீட்டின் மதில் சுவரும் இடிந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

சாலையின் குறுக்கே ராட்சத மரம் சாய்ந்ததால்ஆண்டிபட்டி – ராஜதானி – பாலக்கோம்பை வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

தகவலறிந்த ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை பணியாளர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்த பணியாளர்கள், சாலையில் விழுந்து கிடந்த மரத்தை மர அறுவை இயந்திரங்கள் மூலம் துண்டு துண்டாக வெட்டிப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அப்பாதையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வாகனங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

Spread the love