புதுடெல்லி: உக்ரைன் போரில் 10 இந்தியர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் பலர் விருப்பப்பட்டு சென்றதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவில் வசிக்கும் திவ்யா தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 26 இந்தியர்கள் சுற்றுலா பயணிகளாகவும், படிக்கவும் ரஷ்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் சென்றனர். வேலைவாய்ப்பு வழங்குவதாக அழைக்கப்பட்ட அவர்களின் பாஸ்போர்ட், அடையாள ஆவணங்கள் பறிக்கப்பட்டு, மிரட்டி உக்ரைனுடனான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை கண்டறிந்து தாயகம் அனுப்பி வைக்கும் நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி தாக்கல் செய்த மனுவில் ‘‘26 நபர்களில் 10 பேர் உக்ரைன் உடனான போரில் உயிரிழந்து இருப்பதாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், உக்ரைன் உடனான போரில் பலர் விருப்பப்பட்டு சென்றிருப்பதாகவும், சில ஏஜெண்டுகள் தவறாக வழி நடத்தி இருக்க கூடிய சம்பவங்களும் இருப்பதாகவும், ரஷ்யாவுக்கு 215 இந்தியர்கள் சென்றிருப்பதாகவும்’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

More Stories
ரூ.245.85 கோடி மதிப்பு.. திமுக அரசின் 46 திட்டங்கள்.. மொத்தமாய் ரத்துசெய்த விஜய் அரசு!
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து