புதுடெல்லி: “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நடைபெற்ற பேரணியின்போது போலீஸார் நடத்திய தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபோதும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்துக்கு வருகை தராமல் உள்ளார். உங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா?” என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஜூலை 20 அன்று சிஜேபியினர் நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை வாய் திறக்கவில்லை.
நீங்கள்தான் (அமித் ஷா) நாட்டின் உள்துறை அமைச்சர். இந்தச் சம்பவம் டெல்லியில்தான் நடந்தது. இருந்தும் நீங்கள் வாய் திறக்கவில்லை. உங்கள் வாயை யாராவது தைத்து விட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
கார்கேவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு பேசுவது நாடாளுமன்ற மரபுக்கு ஏற்றதல்ல என்று பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.
சிறிது நேர அமளிக்குப் பிறகு தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இந்தப் பேரணியில் பங்கேற்க கிராமங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்த பிள்ளைகள் மீது பெல்லட் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுள்ளார்கள். இதில், ஒருவருக்கு கண் பார்வை பறிபோய்விட்டது. மற்றொருவருக்கு காது கேட்கவில்லை. இன்னும் ஒருவருக்கு கை போய்விட்டது.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு? உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு. மூடிய கதவுகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு நான் தற்போது பேசுவதை நீங்கள் (அமித் ஷா) கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால், எப்போதும் மூடிய அறைக்குள் ஒளிந்து கொண்டிருக்க முடியாது. ஒருநாள் நாங்கள் உங்களை வெளியே இழுத்து வருவோம்” என்றார்.
அப்போது, பாஜக தரப்பில் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த கார்கே, “நாங்கள் என நான் குறிப்பிட்டது மக்களைத்தான். அதாவது மக்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோரையே. உள்துறை அமைச்சரை நான் இழுத்து வருவேன் என நான் சொல்லவில்லை. மக்கள் சக்தி அவரை வெளியே இழுத்து வரும் என்றுதான் கூறினேன். நான் சொல்வதை கேட்டு பதில் அளியுங்கள்” என்று தெரிவித்தார்.
ஜூலை 20 அன்று டெல்லி போலீஸார் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கார்கே இவ்வாறு பேசியுள்ளார்.

More Stories
ஆகஸ்ட் 1 முதல் அமலாகவுள்ள 5 முக்கிய மாற்றங்கள்: சிலிண்டர் விலை முதல் வங்கி விதிகள் வரை புதிய அப்டேட்கள்!
CJP-யின் புதிய போராட்ட மிரட்டல்; டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு.!!
நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் விடுவிப்பு