டெல்லி: கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையை ஒட்டியிருக்கும் மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக அரசு ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்தது. ஆனால், அப்போதே விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை திருத்தியோ அல்லது புதிய விரிவான திட்ட அறிக்கையோ தாக்கல் செய்யலாம் என ஒன்றிய அரசு, கர்நாடகாவிடம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் புதிய கூறுகளை சேர்க்குமாறு கடந்த 2026 ஏப்ரல் 21ஆம் தேதி அன்று ஒன்றிய நீர் ஆணையத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவை காவிரி நடுவர் மன்றம் மற்றும் 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி, அதை மீண்டும் கர்நாடக அரசுக்கே கடந்த ஜூன் 29ஆம் தேதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தாக்கல் செய்த RTI கேள்விக்கு அளித்த பதிலில், இத்திட்ட அறிக்கை கடந்த மாதமே நிராகரிக்கப்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.
2018-ஆம் ஆண்டு முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்கு என்று கூறியதால் மட்டுமே கொள்கை அளவில் அனுமதி அளிகப்பட்டதாகவும், ஆனால், அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் சிவனசமுத்திரம் நீர்மின் திட்டத்தை சேர்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. பெங்களூரு நகரின் தற்போதைய நீர்த்தேவை என்ன என்ற உண்மையான விவரங்களை தவிர்த்து, பழைய புள்ளிவிவரங்களை கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளதாகவும், தற்போது காவிரியில் இருந்து எவ்வளவு நீரை கர்நாடகா பயன்படுத்துகிறது என்ற விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
மேலும், சிவனசமுத்திரம் நீர்மின் உற்பத்தி திட்டமும் மேகதாது அணை திட்டமும் ஒன்றோடொன்று இணைக்கும் வகையில் அமைந்திருப்பதே இந்த நிராகரிப்புக்கு காரணம். தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், திட்ட அறிக்கையில் தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் சமர்ப்பிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More Stories
‘மே 10-க்குப் பிறகு தான் மேகேதாட்டு பிரச்சினை உருவானதா?’ – திமுக தலைவருக்கு தவெக கேள்வி
ரூ.2.79 கோடி வரி பாக்கி: ஜிஎஸ்டி கடிதத்தால் மூதாட்டி அதிர்ச்சி
சபரிமலைக்கு மில்மா நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் முறைகேடு: பால்வள மேம்பாட்டு துறை அறிக்கை