May 31, 2026

காவல் துறையில் மாநில பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழக காவல் துறையில் காவலர்​களுக்கு மாநில அளவி​லான பணிமூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்​தும் போட்​டித் தேர்​வில் 2-ம் நிலை காவலர்​களாக தேர்வு செய்​யப்​படு​பவர்​கள், காவல் துறை​யில் 10 ஆண்​டு​கள் பணி முடித்த பிறகு முதல் நிலை காவலர்​களாக​வும், 5 ஆண்​டு​களுக்குப் பிறகு தலை​மைக் காவலர்​களாக​வும், அடுத்து சிறப்பு சார்பு ஆய்​வாள​ராக​வும் பதவி உயர்வு வழங்​கப்​படும்.

இவர்​களில் முதல் நிலை காவலர்​களாக தேர்வு செய்​யப்​பட்டு மதுரை, திருச்​சி, நெல்​லை​யில் ஆயுதப்​படைக்கு மாற்​றம் செய்​யப்​படும்​போது, அங்​குள்ள காலிப் பணி​யிடங்​களின் அடிப்​படை​யில் அவர்​களுக்கு விரை​வில் பதவி உயர்வு கிடைத்து விடு​கிறது.

சரக அளவில் பதவி உயர்வு வழங்​கப்​படு​வ​தால் பணி​யில் இளை​ய​வர்​களின் கீழ் பணி​யாற்​றும் நிலை ஏற்​படுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்​களில் காவல்​துறை​யில் காலி பணி​யிடங்​கள் குறை​வாக இருப்​ப​தால் விரை​வில் பதவி உயர்வு கிடைப்​ப​தில்​லை.

இந்​நிலை​யில், 170 காவலர்​கள் விரை​வில் பதவி உயர்வு வழங்​கக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்கு தொடர்ந்​தனர். இந்த மனுக்​களை நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், என். செந்​தில்​ கு​மார் அமர்வு விசா​ரித்​தது.

தமிழக உள்​துறை கூடு​தல் தலை​மைச் செயலர் தாக்​கல் செய்த பதில் மனு​வில், ஆயுதப்​படை​யில் 2-ம் நிலை காவலர்​களாக தேர்​வாகும் நாளி​லிருந்து கணக்​கீடு செய்து சிறப்பு சார்பு ஆய்​வாளர், சார்பு ஆய்​வாளர், ஆய்​வாளர் பதவி உயர்​வுக்கு மாநில அளவி​லான பணி மூப்பு முறை அமல்​படுத்​தப்​படும் என கூறப்​பட்​டிருந்​தது.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: காவலர்​களுக்கு மாநில அளவி​லான பணி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்க வேண்​டும். அரசின் முடி​வின்​படி ஆயுதப்படை​யில் 1993 பேட்​ஜில் தேர்​வாகி இது​வரை பணி​யில் உள்​ளவர்​களுக்கு மாநில அளவி​லான பணி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்க வேண்​டும்.

இதற்​கான பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு உடனடி​யாக பதவி உயர்வு வழங்​கப்பட வேண்​டும். மாநில அளவி​லான சீனி​யாரிட்டி 2026 ஜன. 1-ம் தேதி பணி​யில் இருப்​பவர்​களிடம் இருந்து அமல்​படுத்த வேண்​டும். 2025 டிச. 31-ம் தேதி அல்​லது அதற்கு முன்பு பணி ஓய்வு பெற்​றவர்​களுக்கு இது பொருந்​தாது.

அவர்​கள் இந்த உத்​தர​வின் அடிப்​படை​யில் பணப் பலன்​களையோ, நிலுவை பலன்​களையோ கோர முடி​யாது. ஏற்​கெனவே சரக அடிப்​படையி​லான தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்​றவர்​களை​யும், அவர்​கள் பெறும் பலன்​களிலும் எந்த மாற்​ற​மும் செய்​யக்கூடாது.

மாநில அளவி​லான பணிமூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு குறித்து அரசு உடனடி​யாக அரசாணை பிறப்​பிக்க வேண்​டும். மாநில பணி மூப்பு பட்​டியல் தயார் செய்து 2 மாதங்​களில் வெளி​யிட வேண்​டும். 2026 ஜன.1-ம் தேதி ஓய்வு பெற்​றவர்​களுக்​கும் இந்த உத்​தரவு பொருந்​தும்​. இவ்​வாறு உத்​தர​வில் நீதிபதிகள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Spread the love