
ஜோதி முருகனை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். (உள்படம்) ஜோதிமுருகன்
தென்காசி: சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகனை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2-ம் தெருவை சேர்ந்தவர்கள் சந்திரன், ஜெயலட்சுமி தம்பதியர். ஜெயலட்சுமி முன்னாள் கவுன்சிலர். இத்தம்பதியரின் மகன் ஜோதிமுருகன் (30). சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் ஹோட்டல் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் ஜோதி முருகன் தனது நண்பர்களுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவருடன் இருந்த நண்பர்கள் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றதாக தெரிகிறது.
அப்போது ஜோதி முருகன் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவ்வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஜோதி முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜோதிமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தெரியவந்ததும் ஜோதி முருகனின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. காவல்துறையினர் அங்கு வந்து ஜோதி முருகனின் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மோப்பநாயும் வரவழைக்கப்பட்டிருந்தது. கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை பிடிக்க காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் தலை மையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜோதி முருகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தக் கொலை முன்பகை காரணமாக நடந்ததா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஜோதி முருகனின் மரணத்துக்கு காரண மானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சங்கரன் கோவில் பேருந்து நிலையம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

More Stories
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்