
மீட்கப்பட்ட கன்டெய்னர் லாரி.
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் முத்துமாரியப்பன் (36). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னரை இறக்கிவிட்டு அடுத்த கன்டெய்னரை ஏற்றுவதற்காக சென்னை துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வந்தார்.
அந்தமானுக்கு சரக்கு ஏற்றும் இடத்தில் டிரெய்லர் லாரியை ஓட்டிச் சென்றபோது திடீரென முன்பக்கம் கேபின் (டிரைவர் கேபின்) உடைந்து அதனுடன் முத்துமாரியப்பன் கடலில் தலைக்குப்புற விழுந்தார். இதைக் கண்டு துறைமுக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே துறைமுகம் காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். மேலும் இந்திய கடற்படையும் விரைவாக ஒரு டைவிங் குழுவை அனுப்பி வைத்தது.
அவர்கள் இணைந்து செயல்பட்டு கடலுக்குள் பாய்ந்த டிரெய்லர் கேபினை மீட்கப்பட்டனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு முத்துமாரியப்பன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக துறைமுகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
13-08-2026
13-08-2026
95 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி.