மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (76). இவரது உறவினர்கள் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமியார் சுலோச்சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று அதிகாலை மதுரையில் இருந்து ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
காரை வெங்கடேஷ் ஓட்டினார். சுவாமி தரிசனம் முடித்து விட்டு மதுரைக்குப் புறப்பட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அணுகுசாலை- நான்கு வழிச்சாலை சந்திப்பில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த பிரகாஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரும் அவர்களது இருக்கையில் அமர்ந்தபடி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காருக்குள் சிக்கிய உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியது.

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.