July 2, 2026

ஹரியானாவில் 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு

அம்பாலா: ஹரியானாவின் அம்பாலா மாவட்டம், தனியோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சித் சிங். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வயலில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் 4 வயது மகன் நிர்வேர் சிங் சென்றுள்ளார்.

இந்நிலையில் காலை 6.30 மணியளவில் வயலுக்கு அருகில் விளையாடச் சென்ற சிறு வன், அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து அங்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடு பட்டனர்.

இந்நிலையில் 21 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நேற்று அதிகாலை 3.40 மணிக்கு சிறுவன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அம்பாலா கன்டோன்மென்ட் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு, சிறுவன் நிர்வேர் சிங் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

விவசாயி மீது நடவடிக்கை

அம்பாலா துணை ஆட்சியர் அஜய் சிங் தோமர் கூறுகையில், “ஆழ்துளை கிணறை திறந்து வைத்திருந்த விவசாயி மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

Spread the love