August 15, 2026

“இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்த முடிவு சரியானது”: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, 80 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர்கள் எடுத்த முடிவு சரியானது என்பதையே தமக்கு உணர்த்துவதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு உரையாற்றிய உமர் அப்துல்லா, “இன்று கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LoC) அப்பால் உள்ள ஜம்மு-காஷ்மீரின் அந்தப் பகுதியில் நிலவும் சூழலைப் பார்க்கும்போது, ​​அது வலி, வருத்தம் மற்றும் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.

தனிப்பட்ட முறையில் நான் உணர்வது என்னவென்றால், ஒருவேளை 2019-ல் நமது சூழல் மாற்றப்படாமல் இருந்திருந்தால், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் மக்கள் இன்று நம்முடன் மீண்டும் இணைவதற்காகப் போராடிக்கொண்டிருக்கக்கூடும்.

ஜம்மு-காஷ்மீரின் அந்தப் பகுதி நமக்குச் சொந்தமானது. அந்த மக்களை நாங்கள் எங்கள் சொந்த மக்களாகவே கருதுகிறோம். அவர்களில் யாரும் அந்நியர்கள் அல்ல; யாரும் வெளியாட்கள் அல்ல. காலி இடங்களை என்றாவது ஒரு நாள் அவர்கள் ஏற்றுப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், இன்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் அவர்களுக்கென இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் மிகப்பெரிய பலம் நமது ஜனநாயகமும் கூட்டாட்சி முறையும்தான். எப்பாடுபட்டேனும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும், எத்தகைய சூழலிலும் அதை வலுப்படுத்துவதும், ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் நமது தலையாய கடமையாகும். அதேவேளையில், நாட்டில் கூட்டாட்சி முறையைப் பாதுகாப்பதும் வலுப்படுத்துவதும் நாம் பின்வாங்க முடியாத ஒரு கடமையாகும்.” என்று கூறினார்.

முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள ‘பலிதான் ஸ்தம்பில்’ (Balidan Stambh), முதல்வர், சிவில் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இணைந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Spread the love