June 17, 2026

“அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் சக்கரவாள நல்லூர் மக்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தேவிபட்டினம் அருகே உள்ள சக்கரவாள நல்லூர் கிராம மக்கள், தங்களது கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, தெருவிளக்குகள் மற்றும் வடிகால் வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகள் போதுமான அளவில் இல்லாததால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், மழைக்காலங்களில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர் .

 அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் மக்களின் குறைகளை நேரில் கவனித்து உடனடி நடவடிக்கை எடுத்து, சக்கரவாள நல்லூர் கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தருவார் என்ற நம்பிக்கையுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததாக தெரிவித்தனர்.

Spread the love