
புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அந்நகரில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்து லக்னோவின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) விரிவான ஆய்வு நடத்தியது. ‘பொருளாதார மறுமலர்ச்சி’ என்ற தலைப்பிலான இதன் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதன்படி, ராமர் கோயில் திறப்பதற்கு முன் அயோத்திக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.7 லட்சம் பேர் வருகை தந்தனர். இது, 2024-ம் ஆண்டு ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்கு பிறகு, முதல் 6 மாதங்களிலேயே 11 கோடியை எட்டியது. இது வாராணசி மற்றும் பிற புனித தலங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இதனால் அயோத்தியில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அயோத்தியில் சாதாரண கடைக்காரரின் சராசரி வருமானம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.400-500 ஆக இருந்த இந்த வருமானம் இப்போது ரூ.2,500 வரை உயர்ந்துள்ளது. அயோத்தியில் நிலத்தின் மதிப்பு, குறிப்பாக கோயிலுக்கு அருகில் 5 மடங்கு முதல் 10 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
நகரின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.400 கோடியை எட்டியுள்ளது. இந்த நிதியாண்டில் சுற்றுலா மூலம் அயோத்திக்கான வருவாய் ரூ.10,000 கோடியை தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டை விட 2025ல் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இது 2031-ல் 8,500 முதல் 12,500 வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் 2021-ல் 200 உணவகங்கள் இருந்த நிலையில், தற்போது 2,000 உணவகங்கள் உள்ளன. 2021-ல் 500 ஆக இருந்த ரிக் ஷாக்கள் எண்ணிக்கை 2025-ல் 17,000 ஆக உயர்ந்துள்ளது. நகைக் கடைகள் மூன்றிலிருந்து 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வங்கிக்கிளைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன.
உ.பி.க்கு வரும் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் தொகை ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டும் எனவும் இதில் அயோத்தி முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகள் ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை வரி வருவாயை உருவாக்கும். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More Stories
பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார்: விசாரணைக்கு உத்தரவு, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு
திரிணமூல் காங். கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மற்றொரு அதிர்ச்சி
“வாக்குத் திருட்டு, சீட் திருட்டு, காணிக்கை திருட்டு நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது” – ஜெயராம் ரமேஷ்