
புதுடெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்த விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அந்த ஒப்பந்தத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க இந்தியா உறுதி அளித்துள்ளது (Committed) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது சில திருத்தங்களை செய்து வெள்ளை மாளிகை அறிக்கை (fact sheet) வெளியிட்டுள்ளது. அந்த திருத்தப்பட்ட புதிய அறிக்கையில் வாங்க உத்தேசித்துள்ளது (Intends) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலில் இருந்து விவசாயம் சார்ந்த பொருட்கள் (Agricultural goods) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்து சில பருப்பு வகைகள் (Certain Pulses) நீக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்ற நேரடி வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அமெரிக்காவிடம் இருந்து 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலா் மதிப்பில் எரிசக்தி பொருள்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப சரக்குகள் உள்ளிட்டவற்றை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ரகசியமாக மாற்றப்பட்டிருப்பது, பின்னாளில் சிக்கலுக்கு வழி வகுக்கும் என கூறப்படுகிறது.

More Stories
‘‘கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது’’ – கவாஜா ஆசிப்
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு
டிரம்ப் – நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்