சென்னை: சொத்து பிரச்சினையில் சகோதரரை தாக்கிய வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதனால் ஜூலை 10-ம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் மரியவில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, குடும்பப் பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். ஹாஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி வாதாடினார்.
இதை ஏற்று, உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு வழக்கை அனுப்பி வைத்த நீதிபதி, ஜூலை 13-ம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை மற்றும் சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோரை சமரச தீர்வு மையத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
மரிய வில்சனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கூடாது என பாண்டிச்சேரி அரசு வழக்கறிஞர் ஜி ஜெயராணி ஆஜராகி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 10) நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்களித்து உத்தரவிட்டார்.

More Stories
முன்னாள் முதல்வர் பனகல் அரசர் பிறந்தநாள் – முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம்
“உணவு தானியங்களைக் கூட பாதுகாக்க முடியாதா?” – தவெக அரசுக்கு சீமான் கேள்வி
அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார் மீது விசாரணை கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார்