சென்னையில் காஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் பெரம்பூரில் உள்ள ஆட்டோ காஸ் நிரப்பும் நிலையத்தில் காஸ் நிரப்ப சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்கள்.
சென்னை: சென்னையில் ஆட்டோ எல்.பி.ஜி எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பங்க்-குகளில் காஸ் நிரப்ப 6 மணி நேரம் வரை காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு காரணமாக, எல்.பி.ஜி இறக்குமதி குறைந்துள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க மாற்று வழிகளை மத்திய அரசு ஆலோசிக்கிறது.
இதற்கிடையில், வாகனங்ளுக்கான எல்.பி.ஜி, சி.என்.ஜி எரிவாயு கிடைக்காததால், ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால் டாக்சிகள் எல்.பி.ஜி. மற்றும் சி.என்.ஜி எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். இதுபோல, அதிகரிக்கும் பெட்ரோல்,
டீசல் விலை உயர்வால் பலர் தங்கள் வாகனங்களின் கட்டமைப்பை எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி எரிவாயு மூலம் இயக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் ஆட்டோ எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி எரிவாயுக்கு கடந்த சில நாட்களாகவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நகரின் முக்கிய பகுதிகளான வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள எரிவாயு நிரப்பும் பங்க்-குகள் மூடப்பட்டுள்ளன.
6 மணி நேரம் காத்திருப்பு
அதேநேரத்தில், திறந்திருக்கும் ஒரு சில பங்க்-குகளில் கூட்டம் அலைமோதுகிறது. கீழ்ப்பாக்கம், மீனம்பாக்கம் உள்பட சில இடங்களில் காஸ்நிரப்புவதற்காக, நெடுந் தொலைவுக்கு வரிசையில் சுமார் 6 மணி நேரம் வரைகாத்திருந்தனர். குறிப்பாக, மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு பங்க்-கில்காஸ் நிரப்ப சுமார் 3 கி.மீ. வரை ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாவது: சென்னையில் கடந்த சில நாட்களாக, எல்பிஜி காஸ் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. திறக்கப்பட்டுள்ள சில பங்க்-குகளில், காஸ் நிரப்ப, காலை 6 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. காஸ் நிரப்பவே அதிக நேரம் செலவாவதால், சவாரி செல்வது குறைந்து அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ எல்.பி.ஜி காஸ்-ல் 20 கி.மீ. வரை ஆட்டோ ஓடும். ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 கி.மீ. வரை மட்டுமே செல்லும். இதனால், பெரும்பாலான ஆட்டோக்கள் எல்.பி.ஜி காஸ்-க்கு மாறிவிட்டன. இப்போது 12 கிலோ கொள்ளளவு கொண்ட சிலிண்டர் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ளன.
பெட்ரோல் சுமார் 2 லிட்டர் வரை மட்டுமே பிடிக்கும். இதனால், எரிவாயுவை நம்பியே தொழில் செய்ய வேண்டியுள்ளது. நீண்ட நேரம் காஸ் நிரப்ப காத்திருக்க வேண்டியுள்ளதால், வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுபவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
எனவே, பங்க்-குகளில் எல்பிஜி காஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மத்திய-மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

More Stories
திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் பேச்சு.
குழந்தைக்குப் பெயர் சூட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்துவாக்கு கேட்டார்.