February 7, 2026

தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்

தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும். சில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (பிப்.7) முதல் 11-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகள் மீதும், லட்சத்தீவு, அதை ஒட்டிய பகுதிகள் மீதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக பிப்.12-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். வெப்பநிலை 21 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, ராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதியான திருத்தணியில் 17.5 டிகிரி, மலைப் பகுதியான கொடைக்கானலில் 5.8 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love