February 7, 2026

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திரளான கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பிராய்லர் கறிக்கோழிகக் குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்தால், அவற்றை சுமார் 8 வாரம் வரை வளர்த்து தருவது கறிக்கோழி விவசாயிகளின் தொழிலாகும்.

இதற்காக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கறிக்கோழிக்கு ரூ. 6.50 கூலியாக கொடுக்கின்றனர். மின்சாரக் கட்டணம் உயர்வு, வேலை ஆட்கள் கூலி போன்றவை உயர்ந்துள்ள நிலையில், நீண்ட நாட்களாக இந்த கூலி உயர்த்தப்படாமல் உள்ளதால், கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கறிக்கோழி வளர்ப்பிற்கு கூலியாக கிலோவுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றோம். இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கறிக்கோழி வளர்ப்போர் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்ளதால் இன்று அது தொடர்பான புள்ளி விபரங்களை வழங்கியுள்ளோம். அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து, முத்தரப்பு கூட்டம் நடத்தி, கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என அவர் கூறினார்.

image.png

Spread the love