சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறிவாக்காளர்களுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன்களை விநியோகித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை தெற்கு, பாலக்கோடு, பர்கூர், அண்ணாநகர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பெரும்பாலான தொகுதிகளில் திமுகவினர் ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன்களை தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டவிரோதமாக விநியோகித்து வருவதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞரணி துணைச் செயலாளரான ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “திமுக ஆட்சிக்கு வந்தால்ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்கப்படும் என்றும், இதன்மூலம், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதியை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மட்டுமேசெயல்படுத்த முடியும்.
ஆனால், திமுகவினர் கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு, அண்ணாநகர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களை ஏமாற்றும் வகையில் ரூ. 8 ஆயிரத்துக்கான பரிசுக் கூப்பன்களை வழங்கி தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரின் புகைப்படம் மற்றும் வரிசை எண்ணுடன் கூடிய இந்த கூப்பன்களை சில தொகுதிகளில் வேட்பாளர்களே நேரடியாக வாக்காளர்களுக்கு விநியோகித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஆதாரங்களுடன் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட திமுக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விநியோகிக்கப்பட்ட பரிசு கூப்பன்களை பறிமுதல் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “திமுக சார்பில்வாக்காளர்களுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் விநியோகம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட கட்சிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

More Stories
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் – மக்களே நோட் பண்ணுங்க!
தேர்தலுக்காக 3 நாட்கள் மதுக்கடை விடுமுறை.. நேற்று மட்டும் மது விற்பனை உச்சம் – எவ்வளவு தெரியுமா?