April 10, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு குழு, யூத் ரெட் கிராஸ், என்எஸ்எஸ் மற்றும் என்சிசி சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்து, ஏப். 23ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மாணவ மாணவியர் அனைவரும் தவறாது ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மோகனூர் வட்டாட்சியர் கோவிந்தசாமி, மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வாக்குரிமையின் முக்கியத்துவம் மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பாடலுக்கு கல்லூரி மாணவியர் நடனமாடி, வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை பரப்பினர். மேலும், சைகை நடிப்பு நாடகத்தின் மூலம் மாணவர்கள் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை உணர்த்தினர்.

கல்லூரி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, வாக்குச்சாவடி செயல்முறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. மாணவர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்  கலந்துகொண்டனர்.

Spread the love