April 10, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நேர்மையாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் முன்னிலையில், மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 285 ஓட்டுச்சாவடிகள், சேந்தமங்கலத்தில் 304, நாமக்கல்லில் 310, ப.வேலூரில் 268, திருச்செங்கோட்டில் 290, குமாரபாளையத்தில் 324 என, மொத்தம் 1781 வாக்குச்சாவடிகள் உள்ளன.

வரும் 23ம் தேதி தேர்தல் ஓட்டுப்பதிவை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவது குறித்து, மாவட்ட அளவிலான அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளர்கள் அன்கித்குமார் அகர்வால், மனோஜ் புஷ்ப், சஞ்சய் லாலாசாஹிப் யாதவ், தேர்தல் போலீஸ் பார்வையாளர் மயூர் குலாப்ராவ் பாட்டில், செலவின பார்வையாளர் பிரதீப், முகேஷ் கட்டாரியா, ரோஹித் குமார், புத்தி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள, 1,781 வாக்குச்சாவடிகளிலும், தேர்தல் முந்தைய நாள் மற்றும் தேர்தல் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாக்குச்சாவடியில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை வசதிகளான குடிநீர், மேற்கூரையுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, நீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, மின்விளக்கு வசதிகள், சாய்வுதளம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பார்வையற்றோருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரெய்லி வசதிகள், பிரெய்லி அடையாள பலகை, மருத்துவக் கருவிப் பெட்டி, ஓட்டுச்சாவடி விவரங்கள், வேட்பாளர்களின் பட்டியல், வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை உள்ளிட்ட விபரங்களுடன், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், பார்வையில் படும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ.,க்கள் சரவணன், கண்ணன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், ஸ்வீப் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Spread the love