
புதுடெல்லி: சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ‘தேசிய குழந்தைகள் புற்றுநோயில் இருந்து உயிர்ப் பிழைத்தவர்கள் திட்டம்’ என்பதன் கீழ் நாட்டின் முதல் ஆராய்ச்சியில் கிடைத்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை பிரபல மருத்துவ இதழான ‘லான்செட் பிராந்திய சுகாதாரம் – தென் கிழக்கு ஆசியா’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய ஆசிரியர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ புற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் ரச்சனா சேத் கூறியதாவது: புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகளின் நிலை குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதை ஆவணப்படுத்த கடந்த 2016ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற குழந்தைகளின் விவரங்களை சேகரித்தோம். டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட 20 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 5,400 குழந்தைகளைப் பற்றிய தகவல்களை பெற்று ஆய்வு செய்தோம். புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெறும் குழந்தைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 94.5 சதவீதம் பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்றவர்களுக்கு மருத்துவ ரீதியாக மற்றும் உளவியல் ரீதியாக பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து சவால்களை சந்திக்க வேண்டி இருக்கலாம். இதுபோல் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளை முறைப்படி நாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ரச்சனா சேத் கூறினார்.

More Stories
இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமை! 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில் விசாரணை!
ஹரியானாவில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு: அசுத்தமான குடிநீர் காரணமா?