மம்தா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுயில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 144 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.
தமிழகம், அசாம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி 152 தொகுதி, 2ம் கட்டமாக ஏப்ரல் 29ம் தேதி 142 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சுவேந்து அதிகாரி, திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற முக்கியத் தலைவர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். மே.வங்க பாஜக முன்னாள் தலைவரான திலீப் கோஷ், கரக்பூர் சதார் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேவேளையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பவானிபூர், நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பவானிபூர் எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் அவருக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே நேரடிப் போட்டிக்கான சூழல் உருவாகியுள்ளது. 2021 தேர்தலில், சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் மம்தாவை தோற்கடித்துள்ளார்.
இதற்கிடையில் பாஜக தலைவர் அக்னிமித்ரா பால், அசன்சோல் தெற்கு தொகுதியிலும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஸ்வபன் தாஸ்குப்தா, ராஷ்பிகாரி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த 2021-ல் நடந்த தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 215 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளில் வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

More Stories
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்திய காஸ் டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?
பாஜகவுக்கு மம்தா பானர்ஜி சவால்
சிலிண்டர் தட்டுப்பாடு! முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்தது என்ன?