
நியூயார்க்: வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்து வர்த்தகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தாக்குதல்களில் இந்துக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மைமென்சிங் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்து அரிசி வர்த்தகர் சுஷேன் சந்திர சர்க்கார் (62) கொடூரமான முறையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘இந்துக்கள் மனித உரிமை’ என்ற அமைப்பு ஐ.நா. மற்றும் பல்வேறு நாடுகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் 15 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மத அமைப்புகள், சமூக அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்தின் கீழ், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்கு முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஐ.நா. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வங்கதேச இந்துக்களைப் பாதுகாக்க வேண்டும். ஐ.நா. உட்பட உலக நாடுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தீர்வுள்ள ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு
டிரம்ப் – நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்
கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!