விவசாயக் கழிவுகளும் சோளத் தட்டைகளும் மட்டுமே குஷன் மெத்தைகளாக இருந்த ஒரு கிராமத்துக் களத்திலிருந்து புறப்பட்டு, இன்று சர்வதேசத் தடகள அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்திருக்கிறார் சர்வேஷ் குஷாரே.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் 31 வயதாகும் சர்வேஷ் குஷாரே.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தேவர்காவ் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குஷாரே. இவரது தந்தை வெங்காய விவசாயி. விளையாட்டுத் துறையில் முறையான வசதிகளோ, சர்வதேசத் தரம் வாய்ந்த பயிற்சிக் களங்களோ இல்லாத சூழலில் தான் சர்வேஷின் விளையாட்டு வாழ்க்கை தொடங்கியது.
அவரது தந்தையும் சிறுவயதுப் பயிற்சியாளரும் சேர்ந்து, அறுவடைக்குப் பின் எஞ்சும் சோளத் தட்டைகள், பஞ்சு மற்றும் விவசாயக் கழிவுகளைக் கொண்டு தயாரித்த தற்காலிகத் தரையிறங்கும் குழிகளிலேயே சர்வேஷ் குஷாரே உயரம் தாண்டும் பயிற்சியை மேற்கொண்டார். வறுமையும் வசதியின்மையும் துரத்தினாலும், தடைகளைத் தாண்டி பாயும் அவரது லட்சியக் கனவுக்கு அவை ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.
நேற்றைய இறுதிப்போட்டியில், 2.25 மீட்டர் உயரத்தை மிகவும் லாவகமாகத் தாண்டி பதக்கத்தை உறுதி செய்தார் குஷாரே. தொடர்ந்து 2.28 மீட்டர் உயரத்தைக் கடக்க அவரும், ஜமைக்காவின் ரொமைன் பெக்ஃபோர்டும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இருவரும் ஒரே உயரத்தைக் கடந்திருந்த போதிலும், ‘கவுண்ட்-பேக்’ விதியின்படி குறைந்த முயற்சிகளில் அந்த உயரத்தை எட்டியதால் ஜமைக்கா வீரருக்கு தங்கப் பதக்கம் சென்றடைந்தது. நூலிழையில் தங்கம் கைநழுவினாலும், மனம்தளராமல் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார் குஷாரே.
வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் சர்வேஷ் குஷாரே கூறும்போது, ” பெரிய அளவிலான சர்வதேசத் தொடரில் நான் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளே நம்மை ஒலிம்பிக் கனவை நோக்கி உந்தித் தள்ளும் தளங்கள். அடுத்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நாட்டுக்காக நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வதே என் இலக்கு” என்றார்.
கடந்த மாதம் புவனேஸ்வரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் சர்வேஷ் குஷாரே 2.31 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையைப் படைத்திருந்தார். மேலும், சமீபத்தில் மொனாக்கோவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘டைமண்ட் லீக்’ தொடரில் வெண்கலம் வென்று, நீரஜ் சோப்ராவுக்குப் பின் டைமண்ட் லீக் பதக்க மேடையில் ஏறிய 4-வது இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் எட்டியிருந்தார்.

More Stories
ஒன்றிய அளவிலான கபடி போட்டி பள்ளபட்டி அரசு பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
துயரங்களை வீழ்த்திய தங்கத் தாரகை ஷர்மிளா தன்கர்!
ட்ரம்ப்புடனான ‘தொடர்புகள்’ – அமெரிக்க காங்கிரஸில் ஆஜராக ஃபிபா தலைவருக்கு அழைப்பு