‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ அமைப்பின் தலைவர் பிரதீப் குப்தா
புதுடெல்லி: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரபல தேர்தல் கணிப்பு நிறுவனமான ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ அமைப்பின் தலைவர் பிரதீப் குப்தா என்டிடிவி ஊடகத்திற்குப் பேட்டியளித்தார். அப்போது, தங்களது நிறுவனத்தின் கணிப்புகள் குறித்து அவர் கூறியதாவது:
தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர் வெற்றியை நோக்கி நகருவார் என்றும் நாங்கள் கணிப்புகளை வெளியிட்டோம். ஆனால், ஆரம்பத்தில் எங்களுடைய இந்தத் துணிச்சலான கணிப்பைக் கண்டு அரசியல் விமர்சகர்களும், மற்றவர்களும் எங்களை நோக்கிச் சிரித்தார்கள். எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கேலி செய்தார்கள், ஆனால், எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கண்டு நாங்கள் பின்வாங்கவில்லை.
தரவுகளின் அடிப்படையில் மக்கள் மனநிலையை நாங்கள் துல்லியமாக ஆய்வு செய்தோம். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் எங்கள் கணிப்புக்கு ஆதரவாகத்தான் வாக்களித்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
எங்களை எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனமாகி விட்டனர். தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சக்தியின் வருகையைத் எங்களது நிறுவனம் முன்கூட்டியே உணர்ந்திருந்தது. அது இப்போது உண்மையாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More Stories
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026: ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெக-ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் விஜய் கடிதம்!
மக்களுக்கு நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்
தவெக தலைவர் விஜய்க்கு பவன், லோகேஷ் வாழ்த்து