புதுடெல்லி: ஈரானால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது.
மேலும் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 75% தற்போது மாற்று வழித்தடங்கள் மூலம் வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரசீக வளைகுடாவுக்கும் ஓமன் வளைகுடாவுக்கும் இடையிலான குறுகிய கப்பல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு மிகவும் முக்கியமானது. உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் குறைந்தது 5-ல் ஒரு பங்கு இதன் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக் தாக்குதலை தொடர்ந்து இந்த ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிற வழிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் கொள்முதலை மத்திய அரசு 55 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகவும் தடையற்ற எரி சக்தி விநியோகத்தை உறுதிசெய்திட அதிகாரிகள் பல நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு தரவுகளின்படி அல்ஜீரியா, அங்கோலா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், புரூனே, கனடா, கொலம்பியா, எகிப்து, கிரீஸ், ஈராக், இஸ்ரேல், தென் கொரியா, குவைத், லிபியா, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நைஜீரியா, நார்வே, ஓமன், பனாமா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, வெனிசுலா உள்ளிட்ட 40 நாடுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.
ரஷ்யாவில் இருந்தும் இந்தியா தனது கொள்முதலை தொடர்கிறது. நாட்டின் முதன்மை சப்ளையராக ரஷ்யா இருந்து வருகிறது. “கடந்த மாதம் தினமும் 0.04 மில்லியன் பீப்பாய்கள் வாங்கப்பட்டன. இது நமது விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம்” என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த திங்கட்கிழமை மாநிலங்களவையில் கூறுகையில், “மத்திய அரசு 5.33 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருட்களுக்கான இருப்பு வசதிகளை நிறுவியுள்ளது. இது சுமார் 9.5 நாட்களுக்கான கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும். கூடுதலாக, 64.5 நாட்களுக்கு கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்களுக்கான சேமிப்பு வசதிகளை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுள்ளன” என்றார்.

More Stories
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!
எரிபொருள் தட்டுப்பாடு! செல்போன் டவர், இணைய சேவை பாதிக்கும் அபாயம்!
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு – இந்தியா பரிசீலனை