புதுடெல்லி: வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அடல் பிஹாரி வாஜ்பாய், 1996-ல் குறுகிய காலத்துக்கும், பின்னர் 1998 முதல் 1999 வரையிலும், அதனைத் தொடர்ந்து 1999 முதல் 2004 வரையிலும் என மொத்தம் மூன்று முறை நாட்டின் பிரதமராகப் பொறுப்பு வகித்தார். சிறந்த பேச்சாளர், நாடாளுமன்றவாதி மற்றும் இந்திக் கவிஞரான இவர், பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்து அதன் அரசியல் பயணத்தை வடிவமைத்தார்.
மேலும், தனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு, வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டு வந்து, அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் தலைவராகத் திகழ்ந்தார். தேசத்துக்கு அவர் ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில், 2015-ம் ஆண்டு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் காலமானார்.

More Stories
“இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்த முடிவு சரியானது”: உமர் அப்துல்லா
“பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்”: சுதந்திர தின உரையில் கார்கே சாடல்
“தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி” – பிரதமர் மோடி அறிவிப்பு