
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக டிஆர்பி சார்பில் ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உள்ள தேர்ச்சி மதிப்பெண் நடைமுறை ஆசிரியர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. 2003, 2004 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் ஆசிரியர்களாக பணி ஈர்ப்பு செய்யப்பட்டபோது, அனைவருக்கும் பொதுவான ஒரே குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 40 சதவீதம் மதிப்பெண்களும் (150-க்கு 60), இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம் மதிப்பெண்களும் (150 க்கு 75) சிறப்பு தளர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிசி பிரிவினருக்கு சிறப்பு மதிப்பெண் சலுகை அறிவிக்கப்படவில்லை. அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பணிநிரந்தரம் தொடர்வதில் இப்பிரிவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பிரிவுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் 15 மதிப்பெண்கள் வித்தியாசம் உள்ளது. இது தகுதித் தேர்வுதான். பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 40 சதவீதம் மதிப்பெண்களை (60 மதிப்பெண்கள்) பொதுவானதாக நிர்ணயிக்க வேண்டும் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண்களை குறைத்து தனியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ – அதிமுக 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி