சென்னை: கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும் குறிவைக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.
ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.
இந்த முயற்சிகளைக் கைவிட்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

More Stories
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்
திருச்சி கிழக்கு தொகுதி: தவெக தலைவர் விஜய் பிரச்சார திட்டம்.. – வெளியான முழுவிவரம் இதோ!
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல்..- மீண்டும் வெற்றி பெறுவாரா? தொகுதி அலசல்!