April 22, 2026

பஹல்காம் தாக்குதல் நினைவு நாள் | தீவிரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில் 25 பேர் இந்தியர்கள், ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர். தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் டிஆர்எஃப் பிரிவு இந்த தாக்குதலை மேற்கொண்டது. சம்பவ இடத்துக்கு துப்பாக்கி உடன் வந்த மூன்று தீவிரவாதிகள், அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் 25 பேர், உள்ளூரை சேர்ந்த ஒருவரையும் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மஹாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது. மேலும், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. தற்போது அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏற்படுத்திய வலியை அந்த பகுதி சுமந்து வருகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, ட்வீட் செய்துள்ளார். கடந்தாண்டு இதே நாளில், பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். அவர்களை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் ஒரு தேசமாக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

எந்த வடிவத்திலான தீவிரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. தீவிரவாதிகளின் இழிவான சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.

Spread the love