ரோம்: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சாக்லெட் பரிசளித்தார். இந்த வீடியோ 19 கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்தியா, இத்தாலி பிரதமர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனி பெயர்களின் கலவையான மெலோடி என்ற வார்த்தையை இத்தாலி பிரதமர் மெலோனி உருவாக்கினார்.
கடந்த 2024ம் ஆண்டு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் மெலோனியும் இணைந்து செல்பி வீடியோவை வெளியிட்டனர். இந்த மெலோடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சூழலில் இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று முன்தினம் அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். அப்போது மெலோனிக்கு, `மெலோடி’ சாக்லெட் பாக்கெட்டை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பான செல்பி வீடியோவை மெலோனி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில் அவர் கூறும்போது, “பிரதமர் மோடி மிகச் சிறந்த பரிசைகொண்டு வந்துள்ளார்” என்றார். உடன் இருந்த பிரதமர் மோடி புன்முறுவலுடன் `மெலோடி’என்று கூறி சாக்லெட் பாக்கெட்டை காண்பித்தார். இந்த வீடியோ இதுவரை 19 கோடி பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது.

More Stories
இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி? – வெளியான ஆவணத்தால் வெடித்தது சர்ச்சை
300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகள்
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதை வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா