ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் தற்காலிகமாக தணிவடைந்ததால், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 5 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை (Brent Crude) விலை பேரலுக்கு 4.89 டாலர் குறைந்து 91.9 டாலராக விற்பனையாகிறது.
அதேபோல, அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 4.67 டாலர் சரிந்து 84.64 டாலருக்கு வர்த்தகமானது. கடந்து 3 வாரகாலமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த திடீர் விலைச் சரிவுக்கு, வளைகுடாவில் மோதல் மேலும் தீவிரமடையாது என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 8-ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்தது. குறிப்பாக, ஈரானின் அணு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்தும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.

15 நாட்களில் 11 அமெரிக்க விமானங்கள் அழிப்பு..? ஈரான் புதிய பரபரப்பு தகவல்!
இந்த மோதல் காரணமாக, போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த உலகளாவிய எண்ணெய் வர்த்தகம், தற்போது, ஹார்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பதற்றம் காரணமாக மீண்டும் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலைகள் ஜூலை 23-ஆம் தேதி 96 டாலர் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. இது கடந்த 6 வாரங்களில் அதிகபட்சம் எனக் கூறப்படுகிறது.

b
இந்தச் சூழலில்தான், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதேபோல், அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் புதிய தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப்பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக தான் தற்போது, ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 5 % சதவீதம் வரை சரிந்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கில் நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்றும், பதற்றம் மீண்டும் அதிகரித்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் காணும் வாய்ப்பு இருப்பதாகவும் சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

More Stories
உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்
பதவிக் காலம் முடியும் முன்பே வங்கதேச அதிபர் சஹாபுதீன் ராஜினாமா
தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்