July 17, 2026

இந்தியாவில் முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ படிப்பு

புதுடெல்லி: இந்தியாவிலேயே முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.

நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: ”இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக பொறியியல் உயிரியல் படிப்பை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை நான் இங்கு வெளியிடுகிறேன். மேலும், மருத்துவப் பள்ளிகளைத் தொடங்குவதற்காக ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் கூட எங்கள் அமைச்சகத்திடம் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.

ஒரு அல்ட்ரா சவுண்ட் அல்லது அதி நவீன எம்ஆர்ஐ பரிசோதனை செய்வது என்பது இனி ரேடியாலஜிஸ்டுகளுடன் மட்டுமே நின்றுவிடுவதில்லை. வருங்காலத்தில் இத்தகைய பரிசோதனைகளின் போது ஒரு ரேடியாலஜிஸ்டுடன் இணைந்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொறியாளரும் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே, நமக்கான ஒரு வலுவான, சுதந்திரமான திறமை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, உயிரிப் பொருளாதாரத்தில் இந்தியாவை உலகளாவிய முன்னிலையில் நிலைநிறுத்துவதற்கும், வரும் 2047ம் ஆண்டிற்குள் 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உயிரிப் பொருளாதாரத்தை எட்டுவதற்குமான உத்திகள் குறித்தும் அமைச்சர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.

Spread the love