சென்னை: ஊரக வளர்ச்சித் துறை தொழி லாளர்கள் சங்க மாநில மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் என்.ஆனந்துக்கு சங்க நிர்வாகிகள் நேற்று அழைப்பு விடுத்தனர்.
தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் மாநில மாநாடு, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வரும் ஆக.21, 22-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் நடைபெறும் மாநாடானது 21-ம் தேதி பொது மாநாடாகவும், 22-ம் தேதி பிரதிநிதிகள் மாநாடாகவும் நடைபெற இருக்கிறது.
இதில் ஏஐடியுசி, ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கம், ஊரக உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் என பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், எம்பி கே.சுப்பராயன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.
பொது மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் பங்கேற்று நிறைவுரை வழங்குகிறார். இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் என்.ஆனந்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, மணப்பாறையில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் என்.ரவி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் த.லெனின், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Stories
‘ஃப்ரிட்ஜ் வாங்க கூப்பன்’ – சி.விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஓசூர் அத்திப்பள்ளியில் பேருந்துகள் நிறுத்தம்: தமிழக – கர்நாடகா எல்லையில் போலீசார் குவிப்பு
சட்டசபையில அப்பாவை தேடுறீங்க.. பெற்ற அப்பாவா? வளர்த்த அப்பாவா? விஜய்யை வம்புக்கு இழுத்த ஆர்.பி.உதயகுமார்!