சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ரூ.2087 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026-27 நிதியாண்டில் கடந்த ஏப்.1 முதல் ஜூன் 30-ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 29.83 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 31.47 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு, 3.22 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.1804 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வளர்ச்சி அடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (விபி-ஜி ராம் ஜி) தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் நிதி பங்கீடு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 81.39 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 103.18 லட்சம் தனி நபர் தொழிலாளர்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 1,38,314 மாற்றுத் திறனாளிகள், 581 திருநங்கைகள் உள்ளடங்குவர். ஜூலை 25-ம் தேதி நிலவரப்படி 26.75 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உருவாக்கப்பட்ட மொத்த மனித சக்தி நாட்களில் 87.08 சதவீதம் பெண்கள், 29.69 சதவீதம் எஸ்சி, எஸ்டி குடுங்களை சேர்ந்த பயனாளிகளால் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரத்தை கேட்டிருந்தார்.
அதற்கு, ரூ.2087 கோடி மத்திய அரசிடமிருந்து வர வேண்டி இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை பதில் அளித்துள்ளது.

More Stories
“தமிழகத்தில் ஏற்பட்ட ‘மாற்றம்’ ஏமாற்றமாக மாறியிருக்கிறது” – மு.க.ஸ்டாலின் பேச்சு
“முதல்வர் விஜய்யை வருங்கால பிரதமர் என அமைச்சர்கள் பேசுவது தேவையற்றது” – காங். எம்.பி. கிறிஸ்டோபர் திலக்
மகளிர் கட்டணமில்லா பயணம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம்; அக்.2-ல் அமல் – முதல்வர் விஜய் அறிவிப்பு