June 10, 2026

ஏழை குடும்பங்களுக்கான மானிய விலை சிலிண்டர்கள்.. எண்ணிக்கையை 4ஆக குறைத்த மத்திய அரசு!

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் வரும் குடும்பங்களுக்கான எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. தற்போது நிலவும் சூழல் காரணமாக மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கை 4ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே மானியமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

gas cylinderweb

ஞாயிற்றுக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ₹29 உயர்த்தியதை நியாயப்படுத்தும் அறிக்கையில், ஒரு துணைத் தகவலாகவே இந்த எண்ணிக்கை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 10.5 கோடி ஏழைக்குடும்பங்கள் பெற்று வந்த மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து நான்காகக் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் எம் கானூஜா, அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு 14.2 கிலோ எல்பிஜி ரீஃபில் செய்வதிலும் ₹700, பெட்ரோல் லிட்டருக்கு ₹6 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹30 இழப்பை சந்தித்து வருகின்றன என்பதை சுட்டிக்காட்டி இந்த சிலிண்டர் மானிய குறைப்பை நியாயப்படுத்தியுள்ளார்.

Spread the love