July 25, 2026

குமரகுரு வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட “அருட்செல்வர் அரங்கம்” திறப்பு விழா மற்றும் அருட்செல்வரின் வேளாண்மை, விவசாயிகள் நலப் பணிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சக்திநகர், ஜூலை 25

விழாவிற்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்தார்.

இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அருட்செல்வரின் வேளாண்மை மீதான அர்ப்பணிப்பை பாராட்டினார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே ‘கிஷான் வேர்ல்டு’ இதழை தொடங்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதையும், நதிகள் இணைப்புத் திட்டத்தின் அவசியத்தை அப்போதே வலியுறுத்தியதையும் நினைவுகூர்ந்தார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் “Everything can wait, but not Agriculture” என்ற கருத்தை மேற்கோள்காட்டிய அவர், “Agriculture is Indian Culture” என்ற வாசகத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். விவசாயிகள் நலனுக்காக அருட்செல்வர் மேற்கொண்ட பணிகளையும், சக்தி சர்க்கரை நிறுவனத்தின் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பங்களிப்புகளையும் அமைச்சர் பாராட்டினார். வேளாண்மையை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண்மையின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பு இளம் தலைமுறையினருக்கும், குறிப்பாக வேளாண் மாணவர்களுக்கும் உள்ளது ஏன்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில், முற்போக்கு விவசாயிக்கான அருட்செல்வர் விருது திரு. வி.டி. வள்ளுவனுக்கும், அறிவியல் மூலம் வேளாண்மைக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்கான சி. சுப்பிரமணியம் விருது வனம் இந்தியா அறக்கட்டளையின் திரு. ஸ்கை வி. சுந்தர்ராஜுக்கும், இயற்கை வேளாண்மைக்கான நம்மாழ்வார் விருது திரு. எம். பாலசுப்பிரமணியன் (பாமயன்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அருட்செல்வரின் வேளாண் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வேளாண் கல்வி, விவசாயிகள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியுடன் விழா நிறைவடைந்தது.

Spread the love