June 7, 2026

கோவையில் மாவட்ட, மண்டல் தலைவர்கள் உட்பட அண்ணாமலை ஆதரவாளர்கள் பாஜகவில் இருந்து விலகல்

கோவை: பாஜகவில் இருந்து அண்ணா மலை நேற்று வெளியேறிய நிலையில், கோவையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் விலகி, பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

அண்ணாமலைக்கு தொடர்ந்து போஸ்டர் அடித்து, தனிக்கட்சி தொடங்குவதை எதிர்பார்த்திருந்த அவரது தீவிர ஆதரவாளரான பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணாமலை தொடங்கிய ‘வீ த லீடர்’ அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளோம்.

இது பாஜகவின் ‘பி’டீம் கிடையாது. வரும் தேர்தலில் போட்டி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அது இடைத்தேர்தலாகவும் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலாகவும் இருக்கும்.

விஜய் – அண்ணாமலை ஆகிய இருவரும்தான் இனி தமிழக அரசியலில் இருப்பார்கள்” என்றார். மற்றொரு தீவிர ஆதரவாளரான கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகர் கட்சியில் இருந்து வெளியேறினார்.

அதேபோல் தெற்கு மாவட்டத்தில் உள்ள 22 மண்டல் தலைவர்களில் 14 பேர் விலகிய நிலையில் அவர்களுடன், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் விலகினர்.

முன்னாள் மாவட்ட தலைவரும், எம்பி தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவருமான கே.வசந்தராஜன் வெளியிட் டுள்ள கடிதத்தில், “கடந்த 1998-ம் ஆண்டு முதல் கிளைத் தலைவராக ஆரம்பித்து எம்.பி. வேட்பாளர் வரை என் போன்ற சாமானியரை உயர்த்தியது பாஜக.

கடந்த 28 ஆண்டுகளாக பயணித்த நிலையில், தற்போதைய தமிழக பாஜக, கட்சிக்கு பாடுபட்டவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது எனது ஆவல்.

இந்த நிலையில் உயிருக்கும் மேலாக நேசித்த பாஜகவில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன் கொண்ட தேசிய சிந்தனை கொண்ட, ஊழலற்ற, நேர்மையான அரசியல் பாதையில் அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love