September 12, 2026

சற்றே உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.120 உயர்வு

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.12) பவுனுக்கு ரூ.120 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த 1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,920 குறைந்தது. பின்பு மாலை பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விலை விவரம்: இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,170-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,13,360-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,458-க்கும், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,940-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை ஆகிறது.

Spread the love