சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில்இன்று (மார்ச் 11) பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. நேற்று, இன்று என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 என உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,960-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.616 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,31,960-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,03,600-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.133 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,459-க்கு விற்பனை ஆகிறது.

More Stories
மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து – பலன்கள் என்னென்ன?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!! காரணம்?