சென்னை: தேர்தல் வழக்கு கோரிக்கையில் வேறு ஒருவரின் பெயரை குறிப்பிட்டுள்ளதால், தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தொகுதி திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த எஸ்.ஜெயக்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவக்குமார், சீர்காழி தொகுதி மதிமுக எம்எல்ஏ ஆர்.செந்தில்செல்வன் ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா தரப்பில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு கோரிக்கையில், தனது பெயருக்கு பதிலாக, கோவிந்தராஜன் என்பவர் பெயர் இடம் பெற்றுள்ளதால், இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் கோரிக்கையில் எம்எல்ஏவின் பெயருக்கு பதிலாக வேறு ஒருவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஜூலை 28 ஆம் தேதிக்குள் திருத்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நிராகரிக்கப்படும் எனவும் மனுதாரர் கீதா தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மற்ற தேர்தல் வழக்குகளில் சிலருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள், தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து வழக்குகளையும் ஜூலை 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

More Stories
‘போதையில்லா கரூர்’ விழிப்புணர்வு மாரத்தான்: திருச்சி மத்திய மண்டல ஐஜி தொடங்கி வைத்து பங்கேற்பு
பெரம்பூர் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு
முக்கிய துறைகள் இல்லாததால் அதிருப்தி: புதுச்சேரி என்டிஏ கூட்டணிக்குள் மோதல் – இலாகா வெளியாவதில் தாமதம்