May 7, 2026

தேர்தலின்போது போக்குவரத்து வசதிகளை செய்யாதது ஏன்? – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலின்போது வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகளை செய்யாதது ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ” தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்.23 அன்று நடந்த தேர்தலின்போது வெளியூர் வாக்காளர்கள் பலர் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல போதுமான அரசு பேருந்துகள் கிடைக்காமல் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

பலர் போக்குவரத்து வசதி இல்லாமல் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னையில் உள்ள வெளியூர் வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்திருந்தால் அதிகப்படியான வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கும்.

பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தபால்வாக்குகளும் முறையாக அனுப்பி வைக்கப்படாமல் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். சவுந்தர், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Spread the love