July 30, 2026

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் விடுவிப்பு

புதுடெல்லி: கடந்த 2004, 2009-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ஏல முறையில் நடத்துவதற்குப் பதிலாக, ஒரு பரிசீலனைக் குழுவின் பரிந்துரை மூலம் ஒதுக்கப்பட்டன.

இதனால் அரசுக்கு சுமார் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று 2012-ல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி மதிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் தலாபிரா நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், ஆதித்ய பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஹிண்டால்கோ-வை எப்படியாவது உள்ளடக்க வேண்டும் என்ற ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறைச் செயலாளர் பி.சி. பரக் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2014-ல் மன்மோகன் சிங்கிற்கு எதிரான வழக்கை முடித்து வைக்க சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், நேரில் ஆஜராக மன்மோகனுக்கு சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், கடந்த 2024-ல் மன்மோகன் சிங் காலமானார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த 2 இறுதி அறிக்கைகளின்படி, மன்மோகனுக்கு எதிராக வழக்கை தொடர வலுவான காரணங்கள் இல்லை. அவருக்கு எதிரான சம்மன் ரத்து செய்யப்படுவதுடன், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Spread the love