August 29, 2026

நேபாளத்தில் மாயமான 3 புதுச்சேரி பெண்களின் நிலை தெரியவில்லை: பேரவையில் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: நேபாளத்தில் மாயமான 3 புதுச்சேரி பெண்களின் நிலை குறித்து தகவல் கிடைக்கவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்ட தொடரின் 5வது நாள் கூட்டம் இன்று நடந்தது. தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் குறளை வாசித்து சபை நிகழ்வை தொடங்கினார். தொடர்ந்து நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுவையை சேர்ந்த 3 பெண்களின் நிலை குறித்து சபையில் முதல்வர் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கனை தேடும் பணியில் நேபாள அரசு ஈடுபட்டிருக்கிறது. புதுவையை சேர்ந்த 3 பெண்களின் நிலைமை குறித்து தகவல் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக புதுச்சேரி அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறது. அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வரவில்லை. நேபாளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அறிய முயற்சி செய்து வருகிறோம்‌ என்றார்.

பின்னணி என்ன? – நேபாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் துணைத் தொடரான லாங்டாங் ஹிமாலின் மிக உயரமான பனிச்சிகரம் லாங்டாங் லிருங். அங்குள்ள பனிப்பாறைகள் உருகி பனிச் சிகரத்துக்குள் மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது.

கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிகரத்தில் சுமார் 1.5 கி.மீ. அகலம் கொண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதனால் ஏரி உடைந்து சீனாவின் திபெத் பகுதி மற்றும் நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் 5 பேர் உயிரிழந்தனர். 558 பேரைக் காணவில்லை. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்.

நேபாளத்தில் போடேகோசி, திரிசூலி நதிகளில் பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ரசுவா, தாதிங், நுவாகோட் ஆகிய 3 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள பாதிப்பால் நேபாளத்தில் இதுவரை 579 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 644 வெளிநாட்டினர் உட்பட 2,381 பேரைக் காணவில்லை.

Spread the love