புதுடெல்லி: பிஹார் அரசியலில் பெரும் திருப்புமுனையாக, முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் நேற்று அமைச்சராகப் பதவியேற்றார்.
பிஹாரில் சுமார் 2 தசாப்த கால நிதிஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு வந்து, பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராகப் பொறுப்பேற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த 32 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பொறியியல் பட்டதாரியான 50 வயது நிஷாந்த் குமார், தனது தந்தை முதல்வராக இருந்த நீண்ட காலமும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தேர்தல்களின் போது மட்டும் அவ்வப்போது தந்தைக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த மார்ச் மாதம், நிதிஷ் குமார் மாநிலங்களவைக்குச் செல்ல முடிவு செய்ததைத் தொடர்ந்து, நிஷாந்த் முறைப்படி ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் இணைந்தார். ஜேடியு ஒதுக்கீட்டில் விஜய் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.
துணை முதல்வராக மறுப்பு: நிஷாந்த் அமைச்சரவையில் இணையும் போது பிஜேந்திர பிரசாத் யாதவ் தனது பதவியை விட்டுக் கொடுப்பார் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிஷாந்த் துணை முதல்வர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமார் பதவி விலகிய பிறகு, பாஜகவின் சாம்ராட் சவுத்ரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

More Stories
இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு நீடா கான் கைது – பின்புலம் என்ன?
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு