புதுடெல்லி: தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது நியாயமானதல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை எப்போது குறைப்பார்கள் என நுகர்வோர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், எரிபொருள் விலை குறைப்பு தற்போது இல்லை என்று அமைச்சர் புரி நேற்று பதில் அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் விலை வெறும் 5.58 சதவீதமும், டீசல் விலை 6.23 சதவீதமும் மட்டுமே உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் சுமார் ரூ.2.18 லட்சம் கோடி அளவிலான நஷ்ட ஈட்டுத்தொகையை சமாளித்து வருவதாகவும், கச்சா எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்த கால கட்டத்தில் வாங்கப்பட்ட கையிருப்புகளை இன்னும் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் – அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியது. இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை நேரடியாக பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களில் இருந்து நுகர்வோரை அரசு பெரும்பாலும் பாதுகாத்து வந்துள்ளது.
கச்சா எண்ணெய் நெருக்கடியால் ஏற்பட்ட பெரும்பாலான தாக்கங்களை அரசே ஏற்றுக் கொண்டதாகவும், ஒரே ஒரு சில்லறை விற்பனை நிலையம் கூட எரிபொருள் இல்லாமல் காலியாக இல்லை. நாட்டில் சுமார் 1.07 லட்சம் பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருவதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மேலும் தெரிவித்தார்.

More Stories
டெல்லியில் முதல் முறையாக நிலத்தடி கட்டுப்பாட்டு மையம்
ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்: புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு
இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை