
கவுசல்யா, ராஜேஷ், தீபிகா
பொன்னேரி: பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்துநாடகமாடிய கணவரையும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜேஷுக்கும் (30), அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா (20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கவுசல்யா கடந்த 5-ம் தேதி வீட்டில் தரையில் சிந்தியிருந்த சமையல் எண்ணெயில் கால் வைத்த போது, வழுக்கி விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்ததாக ராஜேஷ், கவுசல்யாவின் தந்தை முருகனிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், கவுசல்யாவின் முகத்தில் நக கீறல்களும், உதடு, தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், கவுசல்யாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து, கவுசல்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸார், வழக்குப் பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் தெரிய வந்ததாவது: கவுசல்யாவின் கணவர் ராஜேஷுக்கும், அவரது சித்தி மகளான, சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.காம்.2-ம் ஆண்டு படித்த வந்த தீபிகா (21)வுக்கும், உறவை மீறிய காதல் இருந்துவந்துள்ளது. அந்த காதல், ராஜேஷின் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்ததால், அதனை தட்டிக் கேட்டுள்ளார் கவுசல்யா.
கொலை செய்ய திட்டம்: இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு லாட்ஜில் ராஜேஷும், தீபிகாவும் அறையெடுத்து, தங்கி கவுசல்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கவுசல்யாவின் முகத்தை தலையணையால் அமுக்கியும், அவரது தலையை சுவற்றில் மோதியும் கவுசல்யாவை கொலை செய்துள்ளார் ராஜேஷ். பிறகு, கவுசல்யா தரையில் சிந்திய சமையல் எண்ணெயில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் தீபிகா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

More Stories
அனுமதி பெறாத கொடிக் கம்பங்கள் அகற்றக் கோரிய வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்
தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்