February 7, 2026

“மக்களை பிரச்சினையாக கருதினார் நேரு” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

“மக்களை பிரச்சினையாக கருதினார் நேரு” - மாநிலங்களவையில் பிரதமர்  மோடி பேசியது என்ன?

புதுடெல்லி வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற இலக்கை நோக்கி வேக​மாக முன்​னேறி செல்​கிறோம் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மாநிலங்​களவை​யில் குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீது கடந்த சில நாட்​களாக விவாதம் நடை​பெற்​றது. இந்த விவாதத்​துக்கு பதில் அளித்து மாநிலங்களவை​யில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று மாலை உரையாற்றினார். அப்​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கோஷமிட்டனர். அமளிக்கு நடுவே பிரதமர் மோடி தொடர்ந்து பேசி​னார். அப்​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்​களவை​யில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்து உள்​ளோம். அந்த இலக்கை நோக்கி நமது நாடு வேக​மாக முன்னேறி சென்று கொண்​டிருக்​கிறது. கடந்த 5 ஆண்​டு​களில் இந்தியா அபரித​மாக வளர்ச்சி அடைந்​திருக்​கிறது. சமு​தா​யத்​தின் அனைத்து தரப்பு மக்​களும் வளர்ச்​சி​யின் பலன்​களை பெற்றுள்ளனர். நமது நாடு சரி​யான பாதை​யில் சென்று கொண்டிருக்​கிறது. குடியரசுத் தலை​வரின் உரை​யில் நாட்​டின் வளமான எதிர்​காலம் குறித்து விரி​வாக எடுத்​துரைக்​கப்பட்டு இருக்​கிறது.

21-ம் நூற்​றாண்​டின் கால் பகுதி நிறைவடைந்​து, 2-வது கால் பகுதியில் அடி​யெடுத்து வைத்​துள்​ளோம். சுதந்​திர போராட்ட காலத்​தைப் போன்று இந்த கால​மும் மிக​வும் முக்​கிய​மானது. நாம் தொடர்ந்து முன்​னேறி செல்ல வேண்​டும். 27 நாடு​கள் அடங்​கிய ஐரோப்​பிய ஒன்​றி​யம், இந்​தியா இடையே வரலாற்று சிறப்​புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இது இந்தி​யா​வின் வளர்ச்​சிக்கு மிகப்​பெரிய ஊக்​கம் அளிக்​கும். ஐரோப்​பிய ஒன்​றி​யம் மட்​டுமன்றி 9 பெரிய நாடு​களு​டன் இந்​தியா வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்​கொண்​டுள்​ளது.

காங்​கிரஸ் ஆட்​சி​யில் பின்​னடைவு: நாடு சுதந்​திரம் அடைந்தபோது உலகின் மிகப்​பெரிய பொருளா​தார நாடு​களின் பட்​டியலில் இந்​தியா 6-வது இடத்​தில் இருந்​தது. ஆனால் காங்கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் நாடு பின்​தங்கி 11-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக் காலத்​தில் இந்தியா மீண்​டும் வேக​மாக முன்​னேற தொடங்​கியது. தற்​போது 3-வது மிகப்​பெரிய பொருளா​தார நாடு என்ற லட்​சி​யத்தை நோக்கி பயணம் செய்​கிறோம். அறி​வியல், விண்​வெளி, விளையாட்டு என அனைத்து துறை​களி​லும் இந்​தியா சாதனை படைத்து வரு​கிறது.

கரோனா பெருந்​தொற்று காலத்​தில் உலக நாடு​கள் பல்​வேறு சவால்​களை சந்​தித்​தன. இந்த பெருந்​தொற்றை இந்​தியா வெற்றிகர​மாக சமாளித்​தது. இரண்​டாம் உலகப்​போருக்கு பிறகு புதிய ஒழுங்கு பிறந்​தது. தற்​போது அதே​போன்ற சூழல் உரு​வாகி உள்​ளது. உலக நாடு​கள் அனைத்​தும் இந்​தி​யா​வுடன் கைகோத்து வரு​கின்​றன. உலகின் நன்​மைக்​காக நட்பு நாடு​களு​டன் இணைந்து தோளோடு தோள் நின்று இந்​தியா பணி​யாற்றி வருகிறது. சர்​வ​தேச அரங்​கில் குளோபல் சவுத் கூட்​டமைப்​பின் ஆதிக்​கம் அதி​கரித்து வரு​கிறது. இந்த கூட்​டமைப்​பின் குரலாக இந்​தியா செயல்​படு​கிறது.

ஒரு காலத்​தில் இந்​தி​யா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்கொள்ள பெரும்​பாலான நாடு​கள் தயங்​கின. இப்​போது நிலைமை முழு​மை​யாக மாறி​யிருக்​கிறது. அனைத்து நாடு​களும் இந்​தி​யா​வுடன் இணைந்து பணி​யாற்ற தயா​ராக உள்​ளன. கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் இந்​தியா பெரும் பின்​னடைவை சந்தித்​தது. அந்த கட்​சி​யின் தலை​வர்​களுக்கு தொலை நோக்​குப் பார்​வை, துணிச்​சலாக செயல்​படும் திறன் இல்​லாத​தால் நாட்​டின் வளர்ச்சி பாதிக்​கப்​பட்​டது.

காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் வாக்கு வங்கி அரசி​யலுக்கு மட்டுமே முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்​சிக் காலத்​தில் கடந்த கால தவறுகள் திருத்தப்பட்டன. ஆட்சி நிர்​வாகத்​தில் பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்​டன. உற்​பத்​தித் துறைக்கு முன்​னுரிமை அளிக்கப்​பட்​டது. குறிப்​பாக குறு, சிறு தொழில் துறை​யின் வளர்ச்சிக்கு முதலிடம் அளிக்​கப்​பட்​டது. இதன்​ காரண​மாக வளர்ச்சி அடைந்த நாடு​களு​டன் போட்​டி​யிடும் அளவுக்கு முன்னேறி உள்​ளோம்.

தற்​போது அமெரிக்கா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்யப்பட்டு உள்​ளது. இது நாட்​டின் வளர்ச்​சிக்கு மேலும் ஊக்​கம் அளிக்​கும். பல்​வேறு நாடு​களு​டன் மேற்​கொள்​ளப்​பட்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தங்​களால் இந்​திய இளைஞர்​களுக்கு புதிய வாய்ப்பு​கள் உரு​வாகி உள்​ளன.

நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சிக்கு வங்​கித் துறை முதுகெலும்பாக விளங்​கு​கிறது. கடந்த 2014-ம் ஆண்டு முன்பு காங்​கிரஸ் தலை​வர்​களின் நிர்​பந்​தம் காரண​மாக குறிப்​பிட்ட நபர்​களுக்கு மட்​டும் கோடிக்​கணக்​கில் கடன் வழங்​கப்​பட்​டது. சாமானிய மக்​களுக்கு வங்​கிக் கடன் கிடைக்​க​வில்​லை. பொதுத்துறை வங்​கி​கள் காங்​கிரஸ் தலை​வர்​களின் தனிப்​பட்ட சொத்​தாக கருதப்​பட்​டன.

காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் விவ​சா​யிகள் வஞ்​சிக்​கப்​பட்​டனர். தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் குறு, சிறு விவசாயிகளுக்கு நிதி​யுதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த திட்டத்​தில் இது​வரை ரூ.4 லட்​சம் கோடி விவ​சாய குடும்பங்களுக்கு வழங்​கப்​பட்​டிருக்​கிறது.

ஊழலில் திளைத்த கட்சிகள்: காங்​கிரஸ், திரிண​மூல் காங்​கிரஸ், திமுக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், ஆம் ஆத்மி உள்​ளிட்ட கட்​சிகள் மத்தி​யிலும் பல்​வேறு மாநிலங்​களி​லும் நீண்ட காலம் ஆட்சி நடத்தி உள்​ளன.

ஆனால் இந்த கட்​சிகள் தங்​களது ஆட்​சிக் காலங்​களில் ஊழல்களில் திளைத்​திருந்​தன. அவர்​களின் ஊழல்​களை மக்​கள் நன்கு அறி​வார்​கள். பாஜக ஆட்​சிக் காலத்​தில் 25 கோடி பேர் வறுமை​யில் இருந்து மீண்​டுள்​ளனர். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

மக்களை பிரச்சினையாக கருதினார் நேரு: பிரதமர் மோடி பேசும்போது, “நேரு ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 35 கோடியாக இருந்தது. இந்த 35 கோடி மக்களும் 35 கோடி பிரச்சினைகள் என்று நேரு குறிப்பிட்டார். இதேபோல இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நாட்டின் மக்கள் தொகை 57 கோடியாக இருந்தது. அவரும் நேருவை போன்றே கருத்து தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. இந்த 140 கோடி இந்தியரையும் வரப்பிரசாதமாக கருதுகிறோம். நாட்டின் பாது காவலர்களாக கருதுகிறோம்.

உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியாவில் தீர்வு காணப்படுகிறது. பல்வேறு நாடுகளில் மூத்த குடி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இந்தியா இளமையான, துடிப்பான நாடாக விளங்குகிறது. ரவ்னீத் சிங் பிட்டு குறித்து ராகுல் காந்தி மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

இதன்மூலம் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் அவர் அவமதித்து உள்ளார். அவர்கள் மீது வெறுப்புணர்வை உமிழ்ந்துள்ளார். பழங்குடியினத்தை சேர்ந்த பெண் நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகிக்கிறார். ஆனால் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி கருத்துகளை தெரிவித்தது” என்றார்.

Spread the love