June 24, 2026

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.யான ஜார்ஜ் குரியனின் பதவிக் காலம் கடந்த 21ம் தேதி முடிவடைந்தது. இதன் விளைவாக, அவர் சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன் வளம், கால் நடை வளர்ப்பு மற்றும் பால் வளம் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட 65 வயதான ஜார்ஜ் குரியன் பாஜகவில் 1980ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் அவர் கட்சிப் பணி, மத்திய அமைச்சர் பணிகளைச் செய்து வந்தார். மேலும், கேரள பாஜகவின் கிறிஸ்தவ முகமாகவும் குரியன் திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக குரியன் தேர்வாகியிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற கேரள பேரவைத் தேர்தலில் கஞ்சிரப் பள்ளி தொகுதியில் போட்டியிட்ட ஜார்ஜ் குரியன் வெற்றி பெறாததால், அவருக்கு மீண்டும் மாநிலங்களவை எம்பி சீட் வழங்க கட்சித் தலைமை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இதையடுத்து அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பதவில் ஜார்ஜ் குரியன் நேற்று வெளியிட்ட பதிவில், ”எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடியே காரணம். அவருக்கு என்றென்றும் எனது நன்றி” என கூறியுள்ளார்.

Spread the love