June 19, 2026

மேகேதாட்டுக்கு ‘நோ’ சொன்ன தமிழகம்!கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம்அரசின் தனித் தீர்மானம்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக அரசு
கொண்டுவந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30
மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள்,
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா
நடவடிக்கையை எதிர்த்து அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த
இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும்
மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய
அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி
நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த
வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை
தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு
தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என
மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றம், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை
எனக் குறிப்பிட்டுள்ளது, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு
பகிர்ந்தளித்துவிட்டால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ,
கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
காவிரிப் பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான
பிரச்சினையாகும்.
ஆதலால், கர்நாடக அரசு மேகேதாட்டுவிலோ அல்லது காவிரிப் படுகையில் வேறு
எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தையோ, பிற
படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும்
மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை
இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது
நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று
மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப்
பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை
தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது” என்று முதல்வர் பேசினார்.

தொடர்ந்து முதல்வரின் தீர்மானத்தின் மீது அரசியல் கட்சித் தலைவர்கள்
உரையாற்றினர். தீர்மானத்தின் மீது முதல் நபராக உரையாற்றிய காங்கிரஸ்
அமைச்சர் ராஜேஷ்குமார், தீர்மானத்தை ஆதரித்தார்.

இது குறித்து பெங்​களூரு​வில் கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார்
நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:  மேகே​தாட்டு அணை
திட்​டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்​யுடன் பேச்​சு​வார்த்தை நடத்த
தயா​ராக இருப்பதாக கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார்
தெரி​வித்​தார்.

Spread the love